மனிதர்கள் புகழப் படுவதனைவிரும்புகிறார்கள்...
மனிதர்கள் புகழப் படுவதனைவிரும்புகிறார்கள், அதிலும் பதவியில், அந்தஸ்தில், அதிகாரத்தில் ஒரு எல்லையை கடந்து விட்டால் பூஜிக்கப் படுவதனை விரும்புகிறார்கள்
மனிதன் தனதுசேவைகள் சாதனைகள் அங்கீகரிக்கப் படுவதனை பாராட்டப் படுவதனை கண்டுகொள்ளும் பொழுது "அல் ஹம்து லில்லாஹ்" மாஷாஅல்லாஹ்" "எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப் படியே" எல்லாப் புகழும் புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு உரியது என்று கூறி மமதை பெருமை இறுமாப்புபோன்ற இழி குணங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றான்.
இத்தகைய ஆன்மீக ஆளுமையைப் பெறாத மனிதர்கள் தம் பூஜிக்கப் படுவதனை"ஹீரோவொர்ஷிப்" விரும்புவார்கள், அடுத்தவர்களை விட தற்பெருமையும் கர்வமும் ஆணவமும், தலைக் கணமும் அவர்களது தலைக்கு ஏறிவிடும் இவ்வாறான ஆன்மீக வறுமை நிலை ஏற்படாமல் இருப்பதற்கே நாம் எதனைச் செய்தாலும்"அல்லாஹ்வுக்காக" "இறை திருப்தியை பெறுவதற்காக" என்ற இக்லாஸ் எனும் உளத் தூய்மையினைக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளப் பட்டுள்ளோம்.
"மகா கணமும் மாட்சிமையும் எனக்குரியவை அவற்றில் எவராவது பங்கு போட்டுக் கொள்ள விரும்பினால் அவரது முதுகெலும்பை முறித்துவிடுவேன் விளைவுகள் குறித்து கவலைப்படமாட்டேன்" என அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளான்.
அதனால் தான்ஆன்மீக உயர்வு ஒன்று மாத்திரமே அல்லாஹ்வின் பார்வையில் மனிதனை அந்தஸ்தில்கூடியவனாக கொண்டு சேர்க்கின்றது.
இத்தகைய அடுத்தவரைமிகைக்கின்ற அல்லது மேய்க்கின்ற இழிகுணம் எல்லை மீறும் பொழுது அக்கிரமக் காரர்கள் தோற்றம் பெறுகிறார்கள் , சாதாரண மனிதர்களே அவர்களை பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள், பிர்அவுன், காரூன் ஹாமான், நம்ரூது, உத்பா, உமையா, அபூ ஜஹ்ல் போன்றவர்கள் தோற்றம் பெறுகிறார்கள்.
வரலாறு நெடுகிலும்இந்த அக்கிரமக் காரர்களின் ஆதிக்க ஜாஹிலிய்யத்துக்கு எதிராகவே இஸ்லாம் மனித குல வரலாறு நெடுகிலும் போராட்டம்நடத்தியுள்ளது.
இன்று நவீன சமூகத்திலும் இந்த ஜாஹிளிய்யத்து நூதனமான வடிவங்களைப் பெற்று வருகிறது அரசியலில் அதிகமாக இருந்தாலும் அறிவுஜீவிகளிடமும் ஆன்மீக போதகர்களிடமும் கூட தாங்கள் மட்டுமே பூஜிக்கப் படவேண்டும் தமது அடையாளமும், நிகழ்ச்சி நிரலும் செல்வாக்கும் விட்டுக் கொடுக்கப் படமுடியாதவை என ஆள் வைத்து அடியாள் வைத்து ஆட்டிப் படைக்கும் அக்கிரமம் நூதனமான பல வடிவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
சமூக நலன்களுக்கான ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள் பற்றிப் பேசப்படும் பொழுதெல்லாம் இந்த ஜாஹிளிய்யத்து குறுக்கே வந்து நிற்கின்றது.
வெளியில் இருந்துவரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதனை விட இந்த உள்வீட்டு ஜாஹிளிய்யத்துக்கு முகம்கொடுப்பது கடினமாக இருக்கிறது.
அல்லாஹ்வுக்காக எந்த பிரபலங்களும் தனி நபர்களும் அல்லது இயக்கங்களும் தத்தமது அடையாளத்தை செல்வாக்கை அல்லது நிகழ்ச்சி நிரலைஅரசியலை முன்னிலைப்படுத்தாது இலங்கையில் உத்தேச தேசிய ஷூரா சபையை அமைக்கும் முயற்சிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.
அஷ்ஷெய்க். கலாநிதி Inamullah Masihudeen (நளீமி)
0 comments:
Post a Comment