Monday, August 26, 2013



ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள்.

ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்!

ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்றதொரு மாதம் அல்ல. ரமழான் எங்களை அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அதன் அழைப்பு எங்களது செவிகளுக்கு எட்டவில்லை போலிருக்கிறது. அதனால்தான் ரமழான் எம்மை விட்டுச் செல்கின்றபோது “ரமழானும் முடிந்து விட்டது!” என்கிறோம். ஏதோ அவசர அவசரமாக வந்துவிட்டுப் போன ஒரு விருந்தாளியைப் போல!  விருந்தாளி எங்களை அழைத்துக் கொண்டு போக வருவதில்லையே!

ரமழான் ஒரு விருந்தாளியல்ல. விருந்தாளியாக வந்தால்தான் “வந்தார், போனார்” என்று கூறி கதையை முடித்து விடுவோம். ரமழான் ஒரு விருந்தாளியல்ல. ரமழான் ஓர் அழைப்பாளி! எங்களுக்கு ஓர் அழைப்பை விடுக்க வந்த அந்த அழைப்பாளரை வந்தார் போனார் என்று கூறித் தட்டிக்கழிக்க முடியாது.

அழைப்பாளர் வந்தார் எனின், அவர் ஏன் வந்தார்? அவர் கொண்டு வந்த அழைப்பு எது? வந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா? அவரது அழைப்பு எந்த இலக்கை நோக்கி உங்களை முன்னேறச் சொல்கிறது? அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஆயத்தங்கள், மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் பற்றி அந்த அழைப்பாளர் என்ன கூறினார்? போன்ற கேள்விகள் அழைப்பாளரின் வருகைக்குப் பின்னால் இருக்கின்றன. ரமழானை வரவேற்று வழியனுப்பி வைப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை அறியாது “ரமழானும் முடிந்து விட்டது. முடிந்த அவசரத்தைப் பாருங்களேன்” என்று கூறலாகாது.

அவ்வாறாயின் ரமழான் விடுக்கும் அழைப்பு எது? பதிலை அறிந்து கொள்ள நபிகளாரின் காலம் வரை சற்றே பின்னோக்கிச் செல்வோம்.

நபித்துவத்தின் பின்னர் பதினைந்து வருடங்கள் உருண்டோடுகின்றன. இக்காலப்பகுதியில் நபிகளாரின் பயணம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி ஒரு ஸ்திரத்தன்மையை அடைகிறது. மக்காவையும், தாயிபையும் கடந்து மதீனாவை நபிகளார் அடைந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாகிய வானுலகத்தை (மிஃராஜின் போது) பார்த்த நபியவர்கள், இப்போது அவனது ஆட்சிக்குரிய ஒரு பிரதேசத்தை மண்ணுலகில் (மதீனாவில்) காண்கிறார்கள். எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் புடைசூழ மக்காவில் இருந்தவர்கள் தீனின் காவலர்கள் (அன்சார்கள்) புடைசூழ மதீனாவை ஆளுகிறார்கள். கொள்கை வடிவில் இதுவரை முன்வைக்கப்பட்ட இஸ்லாம் இப்போது நடைமுறை வடிவம் பெறத் துவங்கியிருக்கிறது.

இஸ்லாம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கி, அது முளைத்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது துளிர்விட்டிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களாக (மக்காவில்) வாழ்ந்த முஸ்லிம்கள், இன்று ஒன்றுபட்ட ஈமானிய சமூகமாக (மதீனாவில்) மாறிவிட்டிருக்கிறார்கள். மொத்தத்தில் அழிவின் விளிம்பிலிருந்த மனித சமூகத்திற்கு விடுதலைக்கும் விமோசனத்திற்குமான அத்திபாரம் போடப்பட்டாகி விட்டது.

இப்போது முஸ்லிம் சமூகம் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

செல்வமும், செல்வாக்கும், ஆட்சியும் அதிகாரமும் அந்த சமூகத்தைத் தேடி வரவேண்டிய காலம் வெகுதூரத்திலில்லை.

ஒரு சமூகம் இந்த நிலையை அடைந்து விட்டால் அதன் அடுத்த கட்டம் ஏனைய சமூகங்களை தனது விருப்பு வெறுப்புகளுக்கு அடிபணிய வைப்பதுதான். உலகில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்த சமூகங்களின் வரலாறுகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஒரே ஒரு சமூகத் தைத் தவிர அதுதான் அல்லாஹ்வின் தூதர் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபியாவில் உருவாக்கிய குர்ஆனிய சமூகம்!



அந்தக் குர்ஆனின் சமூகம் ஏனைய சமூகங்களிலிருந்து இவ்வாறு வேறுபடக் காரணமென்ன?

அச்சமூகம் தனது ஆட்சிபீடத்தில், தனது சொந்த விருப்பு வெறுப்புகளையும், ஆசாபாசங்களையும் அமர்த்தவில்லை என்பதுதான்!

இது எப்படி சாத்தியமாயிற்று! அது உலகில் சாத்தியமாகக் கூடியதா? ஆட்சிக்கு வந்தவர்களில் தமது ஆசாபாசங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் இடம்கொடாதவர்கள். உலகில் இருக்கிறார்களா! அதிசயம்! அதிசயம்!!

அதிசயம்தான். ஆனால் உண்மை! எவ்வாறு என்கிறீர்களா?

நபிகளார் உருவாக்கிய அந்த குர்ஆனிய சமூகத்திற்கு 15 வருடங்கள் செல்கின்றன. அது நுபுவத்தின் 15ம் வருடம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு. பல்வேறு பயங்கரமான கட்டங்களைத் தாண்டி வெற்றிப் படிகளில் முஸ்லிம் சமூகம் கால்வைத்திருக்கும் மதீனாவின் ஆரம்பப் பொழுதுகள். மனித சமுதாயத்தின் விடுதலைக்கும், விமோசனத்திற்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய ஒரு சமுதாயத்தின் உதய நேரம். அல்லாஹ்வின் கட்டளை வருகிறது.

“ஈமான் கொண்டவர்களே! (நோன்பு நோற்கத் தயாராகுங்கள்).... 

...உங்களுக்கு முன்னாலிருந்த சமுதாயத்திற்கு விதியாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்படுகிறது... 

...(காரணம்?) நீங்கள் இறையச்சம் பெறலாம் (என்பதற்காக)

பதினைந்து வருடங்களாக இறையச்சமின்றி வாழ்ந்த ஒரு சமூகத்துக்கு அல்லாஹ் இக்கட்டளையைப் பிறப்பிக்கவில்லை. அல்லது பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நோன்பின் மூலம் அல்லாஹ் அச்சமூகத்திற்கு இறையச்சத்தைப் போதிக்கிறான் என்பதும் இதன் பொருளல்ல.

உண்மையாதெனில், அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் அளவிலா அன்பு கொண்ட சமூகமே அது. அந்த சமூகத்திற்கு இறையச்சம், இறையன்பு போன்றவற்றைப் புதிதாகக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.

என்றாலும் ஒரு சமூகம் பலவீனமாக இருக்கும்போது அதனை வழிநடத்தத் தேவைப்படும் இறையச்சம் வேறு பலம் பெறும்போது அச்சமூகத்தில் இறையச்சம் வகிக்கும் பங்கு வேறு. பலவீனமாக இருக்கும்போது தன்னிடமிருப்பவைகளை தியாகம் செய்து இஸ்லாத்தை வாழவைக்கும் துணிவை வழங்குகிறது இறையச்சம். பலத்துடன் இருக்கும்போது வரம்புகளை மீறாமல், அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல், அடக்குமுறைகளைப் பிரயோகிக்காமல் இஸ்லாமியப் பணியில் ஈடுபடும் ஆற்றலை வழங்குகிறது இறையச்சம்.

இது இறையச்சமுள்ள சமூகத்தின் நிலை.

இறையச்சம் இல்லாத சமூகங்களைப் பொறுத்தவரை அவற்றின் வரலாறே வேறு!

அத்தகைய சமூகங்கள் நசுக்கப்படும் போதெல்லாம் நீதிக்குக் குரல்கொடுக்கும் சமூகங்களாக இருந்திருக்கின்றன. எப்போது அந்த சமூகங்கள் ஆட்சிக்கு வருகின்றனவோ அப்போது அவை அநீதிக்குத் துணைபோகின்றன. இதுவே வரலாறு.

இந்த வரலாறு முஸ்லிம்களாலும் மீட்டப்படலாகாது. முஸ்லிம்கள் “பலத்திலும் நீதி, பலவீனத்திலும் நீதி” என்ற கோட்பாட்டைக் கடைபிடிப்பவர்கள். ஆனால் அந்தக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பாரியதொரு சவாலுக்கு அவர்களும் முகம்கொடுத்தாக வேண்டும். மனிதப் பலவீனங்கள், உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள் என்பவையே அந்த சவால். மனிதர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் இந்த சவால் பொதுவானதே.

ஒரு சமூகம் பலவீனமாக இருக்கும் போது இந்த சவாலை எதிர்கொள்வது சுலபம். காரணம் தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக அச்சமூகம் தனது ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் பலம் பெறும்போது, ஏனைய சமூகங்களை தனது செல்வாக்கிற்கு அடிபணியவைக்கும் ஆற்றலைப் பெறுகின்றபோது தமது ஆசைகளையும் விருப்பு வெறுப்புகளையும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அச்சமூகத்துக்கிருப்பதில்லை.

இந்த இடத்தில்தான் ஆசைகளை அடக்கியாளும் பயிற்சி ஒரு சமூகத்திற்கு இன்றியமையாததாக மாறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் உலகில் உருவாக்கிய உன்னத சமூகம் இது போன்ற தொரு கட்டத்தை நெருங்கியவேளையில் தான் அல்லாஹ் அந்த சமூகத்துக்கு ஆசைகளை நெறிப்படுத்தும் பயிற்சியை வழங்க நினைத்தான் போலும், அல்லாஹு அஃலம்.

அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு விளக்கம் சொல்லும் முயற்சியல்ல இது. எனினும் இறைவழிகாட்டலில், உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாற்றையும், அதன் போக்கையும் அவதானிக்கும்போது குர்ஆனின் ஒவ்வொரு வழிகாட்டலும் அந்தச் சமூகத்தின் எத்தகைய தேவைகளை நிறைவு செய்திருக்கின்றன? எவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியிருக்கின்றன? எத்தகைய சவால்களையும், சூழல்களையும் எதிர்கொள்ளும் பயிற்சிகளையும் ஆற்றல்களையும் வழங்கியிருக்கின்றன? என்பவற்றைக் காணலாம்.

நோன்பு ஒரு சமூகத் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், ஒரு சவாலை எதிர்கொள்வதற்குமாக விதியாக்கப்பட்ட கடமை என்று மட்டும் எடுத்துக் கொள்ளலாகாது. மாறாக அது ஒரு இபாதத்.

இருப்பினும் இஸ்லாம் விதித்துள்ள (இபாதத்துகள்) வணக்க வழிபாடுகள் மறுமையை மட்டும் இலக்காகக் கொண்டு உலகத்தைப் புறக்கணிக்கும் இயல்பு கொண்டவைகளல்ல. உலக வாழ்க்கையிலிருந்து மனிதனைப் பிரித்து வேறுபடுத்தி அவனது ஆன்மாவுக்கு மட்டும் உரமூட்டும் தன்மை கொண்டவையாகவும் அவை இல்லை. மாறாக, உலக வாழ்க்கையை நெறிப்படுத்தி அதனூடாக மனிதனுக்கு விமோசனத்தை வழங்கும் நோக்கம் கொண்டவையாகவே இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் நோன்பின் உலகப் பயன்பாடுகளுள் ஒன்றை, ஸஹாபிகள் சமூகத்தின் வரலாற்றில் நாம் பார்க்க முடியும். அந்த சமூகம் பலவீனமாக இருந்த கட்டத்தைத் தாண்டி பலம்பெறும் நிலையை அடைந்தபோது, பல்வேறு ஆசைகளுக்கு அடிமையாகி, தனது நோக்கத்தை உலகில் மறந்து விடாதிருக்கும் ஓர் உன்னத பண்பாட்டுப் பயிற்சியின் தேவை அதற்கிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் அல்லாஹ் அச் சமூகத்துக்கு நோன்பைக் கடமையாக்குகிறான். நோன்பு அல்லாஹ்வின் விருப்பங்களுக்காக மனிதன் தனது விருப்பங்களைத் தியாகம் செய்யும் ஆன்மிகப் பண்பாட்டுப் பயிற்சியை வழங்குகிறது. இந்த உண்மையைப் புரியவைக்கிறது நோன்பின் மகத்துவத்தை உணர்த்தவந்த பின்வரும் ஹதீஸ் குத்ஸி:

“ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு (நற்) செயலும் அவனுக்குரியது. நோன்பைத் தவிர. அது எனக்குரியது. அதன் கூலியாக நானே இருக்கிறேன். ஏனெனில் அவன் எனக்காக தனது உணவையும்குடிப்பையும்ஆசைகளையும் விட்டுவிடுகிறான்.

ஆம்! அல்லாஹ்வின் ஆசைகளுக்காக தனது ஆசைகளைத் தியாகம் செய்யும்போதுதான் நோன்பின் மகத்துவம் அதி உச்சத்தை அடைகிறது.

இத்தகைய ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சி உலகை வழிநடத்தும் சமூகங்களுக்கு வழங்கப்படாதபோதெல்லாம் அச்சமூகங்கள் உலகில் தமது பலத்தையும் அதிகாரத்தையும் பிரயோகித்து தமது ஆசைகளையே நிறைவேற்றிக்கொள்ள முயலுகின்றன. விளைவாக உலகில் குழப்பங்களும், அக்கிரமங்களும் மலிந்து விடுகின்றன.

உலகின் இந்த நிலை மாற வேண்டுமானால் நோன்பு நோற்கும் சமூகம் உலகை வழிநடத்த வேண்டும். ஸஹாபி கள் சமூகம் உலகை வழிநடத்தும் நிலையை நெருங்கியபோதுதான் நோன்பை அந்த சமூகத்தின்மீது அல்லாஹ் கடமையாக்கினான். ஆனால் இன்று நோன்பு நோற்கும் சமூகம் தனது சமூகத்தை, தனது கிராமத்தை, ஏன் தனது வீட்டைக்கூட வழிநடத்த முடியாமல் இருக்கிறது.

நோன்பு வெறும் பசியும் தாகமுமல்ல. உலகில் நடக்க வேண்டிய இஸ்லாமிய பணிக்கும் அந்தப் பணியின் மூலம் உலகில் ஏற்படவேண்டிய பாரிய சமூக மாற்றத்திற்கும் தேவையான ஆன்மிக பண்பாட்டுப் பயிற்சியே நோன்பு!

நோன்பின் அழைப்பு புரிகிறதல்லவா?

நோன்பு ஒரு புறத்தில் சுவனத்திற்கான அழைப்பை விடுக்கிறது. அதனை நாம் இங்கு விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அது பற்றிய போதுமான விளக்கங்கள் பரவலாகக் கிடைப்பதன் காரணத்தால்.

நோன்பு மறுபுறத்தில் உலகை வழி நடத்த வேண்டிய முஸ்லிம் சமூகத்தின் பாரிய பொறுப்பையும் அந்தப் பொறுப்பை சுமந்து செயல்படுவதற்கான ஒரு முக்கிய பயிற்சியையும் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறது.

நோன்பின் அழைப்புக்கு முஸ்லிம் சமூகம் செவிசாய்க்குமா? அல்லது அதனை ஒரு விருந்தாளியாகக் கருதி வந்தவரை வழியனுப்புவது போல வழியனுப்பி வைத்துவிடுமா?



உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

0 comments:

Post a Comment